மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில் பாடல் வண்டு அறையும் பழனத் திருப் பனையூர், தோடு பெய்து, ஒரு காதினில் குழை தூங்க, தொண்டர்கள் துள்ளிப் பாட, நின்று ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே.
| [ 1]
|
நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு, சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர், நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று, ஆறு சூட வல்லார் அவரே அழகியரே.
| [ 2]
|
செங்கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு பைங்கண் வாளைகள் பாய் பழனத் திருப் பனையூர், திங்கள் சூடிய செல்வனார், அடியார் தம்மேல் வினை தீர்ப்பராய் விடில் அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே.
| [ 3]
|
வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள் பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர், தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே.
| [ 4]
|
கொங்கையார் பலரும் குடைந்து ஆட, நீர்க் குவளை மலர்தர, பங்கயம் மலரும் பழனத் திருப் பனையூர், மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர்; மான் மழுவினொடு அங்கைத் தீ உகப்பார்; அவரே அழகியரே.
| [ 5]
|
Go to top |
காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணை அம் கடல்; அப் பா விரி புலவர் பயிலும் திருப் பனையூர், மா விரி மட நோக்கி அஞ்ச, மதகரி உரி போர்த்து உகந்தவர்; ஆவில் ஐந்து உகப்பார்; அவரே அழகியரே.
| [ 6]
|
மரங்கள் மேல் மயில் ஆல, மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல் திரங்கல் வன் முகவன் புகப் பாய் திருப் பனையூர், துரங்க வாய் பிளந்தானும், தூ மலர்த் தோன்றலும், அறியாமல்-தோன்றி நின்று, அரங்கில் ஆட வல்லார் அவரே அழகியரே.
| [ 7]
|
மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல், பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர், வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ- அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே.
| [ 8]
|
குரக்கு இனம் குதி கொள்ள, தேன் உக, குண்டு தண் வயல் கெண்டை பாய்தர, பரக்கும் தண்கழனிப் பழனத் திருப் பனையூர், இரக்கம் இல்லவர் ஐந்தொடு ஐந்தலை தோள் இருபது தாள் நெரித அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே.
| [ 9]
|
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில், பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர், வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன் செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.
| [ 10]
|
Go to top |